ஏழரை சனி என்னவெல்லாம் செய்யும்? மனதில் இந்த பயம் கலந்த கேள்வியை கடக்காத ஒரு 40 வயது கடந்த நபரை நீங்கள் பார்க்கவே முடியாது. முதலில் ஏழரை சனி பற்றிய சில ஜாதக விளக்கங்களை பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களில் வெளிவட்ட கிரகமாகிய சனி கோட்சாரத்தில் ஒரு ராசியை கடக்க கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசியை முதல் வீடாக வைத்து கொண்டால், சனி 12, 1, 2 ஆம் ராசிகளை கடக்கும் காலமே செல்லமாக ஏழரை (3x 2.5 = 7.5) என்று சொல்லப்படுகிறது. பிற கிரகங்கள் ஒரு பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் நிலையையும் கணக்கில் கொண்டே ஏழரை என்ன செய்யும் என்று கணிக்க வேண்டும். இன்றைக்கு பொதுவெளியில் சொல்லப்படும் ஏழரையின் பொதுப்பலன்கள் தோரயமானவையே என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
சோதிட ரீதியாக சில குறிப்புகளை பார்க்கலாம்.
1. சனி சோதிடத்தில் குறிப்பிட்ட பாவகத்தில் (நின்ற மற்றும் பார்க்கும் இடங்கள்) தாமதத்தை, மந்தத்தன்மையை ஏற்படுத்தும் கிரகம் என்று சொல்லப்படுகிறது. தனித்த சனி, அது நின்ற இடத்தை மற்றும் பார்க்கும் இடத்தை பாழ்படுத்தும். மிகவும் பரவலாகப் பயன்படுத்தும் பராசரர் முறை சோதிடத்தில், சனிக்கு 3, 7 மற்றும் 10 ஆகிய சிறப்பு பார்வைகள் உண்டு.
2. பிருகு நந்தி நாடி போன்ற முறைகளிலும் 2,12 ஆம் வீடுகளில் ஒரு கிரகம் நின்றால் அது கிரக இணைவாகவே எடுத்துக்கொள்ளப்படுவதால், அந்த முறையிலும் இந்த ஏழரை ஒரு விதத்தில் பொருந்தும் என்று எடுத்துக்கொள்ளலாம்.
3. இந்த 7.5 வருடத்தில் சனி 7 முதல் 9 முறை வக்கிரம் வேறு ஆவார். இதனோடு செவ்வாய் வரையான சில கிரகங்களோடு கிரக யுத்தம், மற்றும் சூரியனால் அஸ்தங்கம் ஆகும் காலங்களும் ஆண்டாண்டுக்கும் உண்டு. அவையெல்லாம் சோதனையான காலங்கள் எனலாம்.
4. மேலும் இந்த 7.5 ஆண்டுகளில் இந்த கோட்சார சனிக்கு இருமுறையாவது கோட்சார குரு சேர்க்கையோ அல்லது பார்வையோ கிடைக்கும். அந்தக் ஓரிரு வருட காலங்கள் நேர்மறையானவை. நல்லவை.
5. அதே நேரம் இந்த ஏழு ஆண்டுகளில் ஒரு முறையாவது (கிட்டத்தட்ட 18 மாதங்கள்) ராகு அல்லது கேது சேர்க்கை (அல்லது 1,5 அல்லது 9 ஆம் பார்வை) இந்த சனிக்கு கிடைக்கும் அல்லது சனி அந்த கிரகங்களைப் பார்க்கும். இது எதிர்மறையான பலன்களை ஜாதகருக்கு தரும்.
6. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் மனோகாரகர் மற்றும் உடல்காரகர். சந்திரன் மிகவும் வேகமாக ஒரு ராசியை கடக்கும் கிரகம்.
பிறப்பு ஜாதகத்தில் மிகவும் வேகமாக நகரும் ஒரு கிரகத்தின் மீது (சந்திரன்) ஒரு மிகவும் மெதுவான கோட்சார கிரகம் (சனி) கடந்து செல்லும்போது விளையும் பொதுவான கூட்டுவிளைவுகளே ஏழரை. இப்போது இந்த ஏழரையை, தனித்துவமான 2.5 வருடங்களாகப் பிரித்து புரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு ஜாதகத்திலும் சந்திரன் உள்ள பாவம் லக்கினம் என்று கொண்டு இந்த ஏழரையை கணக்கிட வேண்டும். கீழே உள்ள படங்களில் அதுபோல வரும் காலங்களை ஒரு உதாரணம் மூலம் விளக்கி உள்ளேன். முதலில் சந்திரனுக்கு 12இல் சனி வரும் விரயச்சனி பற்றி பார்க்கலாம். சோதிட ரீதியாக என்னென்ன விளைவுகள் நிகழும் என்று சுருக்கமாக சொல்ல முயல்கிறேன். சனியின் பார்வை விழும் இடங்களை X குறியிட்டு காட்டியுள்ளேன். சனி நின்ற ராசிகளை XX என்று குறித்து உள்ளேன்.
1. விரய சனி:
இது நிகழும்போது, சனி தனக்கு சிறந்த இடம் என்று சொல்லப்படும் சந்திரனுக்கு 11ஆம் லாப வீட்டில் இருந்து 12க்கு வருவார். 11இல் இருக்கும் காலத்தில் பலவிடயங்களில் ஜாதகருக்கு லாபம் தந்து, நன்மைசெய்து அவரை சற்று சோம்பேறியாக மாற்றி இருப்பார் (11இல் சனி இருக்கும்போது சந்திரனுக்கு சனியின் 3ஆம் பார்வை இருக்கும்). ஜாதகர் ஒருவித அலட்சிய மனப்பான்மையோடு இந்த காலத்தில் வாழ்ந்து இருப்பார்.
சனி 12 ஆம் இடத்தில் நுழையும் போது அவர் முதலில் அந்த இடத்தை கெடுத்து (XX), தேவையற்ற மருத்துவ செலவுகளைத் தருவார் (12ஆம் இடம் மருத்துவமனை), தூக்கத்தைக் கெடுப்பார். தனது 3ஆம் பார்வையால் வருமானத்தை, குடும்ப ஸ்தானத்தை (சந்திரனுக்கு 2ஆம் இடம்) கைவைப்பார். சந்திரனுக்கு ஆறாம் இடத்தை பார்ப்பதால் (7ஆம் பார்வையாக), அந்த பாவத்தை தூண்டி, கடன், நோய், வழக்குகளுக்கு பிள்ளையார் சுழியைப் போடுவார். சந்திரனுக்கு ஒன்பதாம் இடத்தை, சனி தனது 10ஆம் பார்வையால் கெடுப்பதால் இலகுவாக முன்பு இலகுவாக வந்துகொண்டிருந்த வருமானங்கள் தாமதப்படும்.
கிட்டத்தட்ட ஆபரேஷனுக்கு முன்னர் வலி தெரியாமல் இருக்க அனஸ்தீஷியா மருந்து கொடுப்பது போல இருக்கும். இந்த 2.5 வருட காலத்தில் ஒரு இரண்டு முறை வக்கிரம் ஆகும்போது கொடுத்த மருந்தில் இடம் மறத்துவிட்டதா என்று குத்தி வேறு பார்ப்பார். வலிக்கும்! ☹
ஏன் சிலவிடயங்கள் நம் கையை மீறி நடக்கிறது என்று பிடிபடவே இரண்டு வருடம் ஆகிவிடும். இந்த காலத்தில் குருபார்வை அல்லது சேர்க்கை இருந்தால் ஓரளவுக்கு பரவாயில்லாமல் இருக்கும். அப்படியும் அதிக பட்சம் ஒரு வருடம் மட்டுமே ஆறுதல்!
2. ஜென்ம சனி
பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் உள்ள ராசிக்கு கோட்சார சனி வரும் 2.5 வருடம் இந்தக் காலம். சனி தான் நின்ற வீட்டை கெடுப்பார். ஜாதகருக்கு மனக்கலக்கத்தையும் செயலற்ற தன்மையையும், உடலும் மனமும் ஒத்துழைக்காத நிலையையும் தருவார். இந்த இணைவு புனர்பூ தோஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் நீங்கள் ஒன்று நினைக்க, செயல் வேறு ஒன்றாக எதிர்மறையாக நடக்கும். இந்த காலகட்டத்தில் இந்த இருகிரகங்களுடன் பிறப்பு ராகு/கேது அல்லது கோட்சார ராகு/கேது இருந்துவிட்டால் ஜாதகர் நிலை படுமோசம். ராகு/கேதுவும், சனியும் ‘நல்லா வச்சி செஞ்சிட்டு’ போய்டுவாங்க. பலருக்கும் வேலை காலி ஆகிவிடும். சொந்த தொழிலில் பெரும் நஷ்டம் வரும்.
இதனோடு சனியின் பார்வை பட்ட இடங்களாகிய வீரியஸ்தானம் (சந்திரனுக்கு 3ஆம் இடம் - X) அடிபடும். தொடர்ந்து வாங்கும் அடி காரணமாக, புதிய முயற்சி செய்ய மனமில்லாத நிலையில் நபர் இருப்பார். முயற்சிகளும் பலிக்காது.
சந்திரனுக்கு 7ஆம் பாவம் சனியின் 7ஆம் பார்வையை பெறுவதால் உற்ற துணைவர்களும், நண்பர்களும் ஜாதகரால் பாதிக்கப்படுவார்கள். எதிர்பார்க்கும் இடத்தில் உதவி கிடைக்காது. அவர்களே பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.
இந்த காலத்தில் நல்ல பலனாக, சனி தனது 10ஆம் பார்வை மூலம் சந்திரனுக்கு 10ஆம் பாவத்தை தூண்டுவார். இந்த காலத்தில் ராகு/கேது பார்வை இல்லை என்றால் வேலை செய்யும் பாவம் விருத்திக்கு வரும். குரு சேர்க்கை அல்லது பார்வை இந்த காலத்தில் கிடைத்தால், ஜாதகர் சொந்த வீடு வாங்குதல், சொந்தத் தொழில் தொடங்குதல் போன்றவற்றை செய்ய இது நல்ல காலம் ஆகும். இது சாதனை புனர்பூ காலம் ஆகும். இதற்கு நபரின் பிறந்தகால ஜாதகமும் ஒத்துழைக்க வேண்டும். நல்ல தசா-புக்திகள் நடக்கவேண்டும்.
இந்த 2.5 வருடங்கள் கிட்டத்தட்ட ஜாதகர் வாழ்க்கையை முழுதும் உணரும் காலமாக அமையும். தன்னை புதுப்பித்துக்கொள்ளும் காலம் எனலாம். இது சனி ஆபரேஷன் செய்யும் காலம். கொடுத்த வலிமருந்தையும் தாண்டி பல நேரம் வலி தெரியும்.
3. பாத சனி:
ஏழரையில் இது கடைசி பாகம். சனி தான் நின்ற வீடாகிய இரண்டாம் பாவத்தை (XX - குடும்பம் மற்றும் தேவையான வருமானம்) சோதனைக்கு உள்ளாக்குவார். பார்வையைவிட, அந்த இடத்தில் நிற்கும்போது சேதாரம் அதிகம் இருக்கும். சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது. பேச்சில் பொய் அதிகம் இருக்கும். பணம் தங்காது. சிலருக்கு 'சிங்கி' அடிக்கும் காலமாக இருக்கலாம்.
தனது 3ஆம் பார்வையால் சந்திரனுக்கு நான்காம் இடத்தை படுத்துவார். வீடு திரும்பவே அல்லது வீட்டில் இருக்கவே பிடிக்காது. வீட்டில் கசப்பை தருவார்.
8ஆம் பாவத்தை சனி தனது 7ஆம் பார்வையால் பார்ப்பதால், தேவையற்ற அவமானங்களை, வழக்குகளை, பெரிய மருத்துவ செலவுகளை ஜாதகர் சந்திப்பார். தனது 10ஆம் பார்வையால் லாப ஸ்தானமாகிய 11ஆம் இடத்தை பார்ப்பதால் கையில் ஒன்றும் தாங்காது.
இந்த காலத்தில் ராகு/கேது சேர்க்கை இருந்தால் நபருக்கு பிரச்சினை அதிகம். அதுவே குரு பார்வை சனிக்கு இருந்தால், அந்தக் காலத்தில் சொந்த வீடு அமையும். இரட்டை தொழிலும் அமையலாம்.
பாதிப்புகளை குறைக்க என்ன செய்யலாம்?
சனி பெயர்ச்சிக்கு ஒருவர் தன்னை முன்னமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சனி 11இல் இருக்கும்போதே, பின்னர் வர இருக்கும் ஏழரைக்கு தேவையான பொருளை ஒதுக்கிவைத்து விடவேண்டும். சோம்பேறியாக ஆகிவிடாமல் உடல்நலத்தில் நல்ல அக்கறை, சொல்லும் சொல், செய்யும் வேலையில் அதிக கவனம், போதுமான மருத்துவ இன்சூரன்ஸ், கடன் கொடுக்கல் வாங்கல், தேவையற்ற வம்பு வழக்குகள், அதிகப்படியான ஆசை, கூடா நட்பு போன்ற விடயங்களில் அதிக கவனம் தேவை. இந்தக் காலத்தில் வாழ்க்கை நிறையப் பாடங்களை கற்றுத்தரும். திறந்த மனதோடு, அதிகம் ஆசை இல்லாமல் வருவதை ஏற்றுக் கொள்ளத்தயாராக இருந்தால், ஏழரை பெரிய பாதிப்பை தருவதில்லை எனலாம்.
விரய சனி, பாத சனி மற்றும் அஷ்டம சனி ஆகிய காலங்களில் பொதுவாக பாதிக்கப்படும் பாவம் 2ஆம் பாவம் என்பதால் அது சம்பந்தப்பட்ட பேச்சு, குடும்பம், தினசரி வருமானம் ஆகியவை கவனமாக கையாளப்பட வேண்டும்.
விதிவிலக்குகள்:
இவற்றை சொல்லாமல் இந்த பதில் நிறைவு அடையாது.
உங்கள் ஜாதகத்தில் ஏழரை நடக்கும் காலத்தில் தசா-புத்திகள் நன்றாக, சாதகமாக இருந்தால், கோட்சார சனி பெயர்ச்சி பெரிய பாதிப்புகளை தந்துவிடாது. உங்கள் தசா-புக்தி நாதன்கள் 5 பரல்களுக்கு மேல் சுயமாக வாங்கி இருந்தால், ஏழரை பெரியதாக பாதிக்காது.
உங்கள் ஜாதகத்தில் மொத்த அஷ்டகவர்க்க கட்டத்தில் சனி 5 பரல்களுக்கு மேல் சுயமாக வாங்கி இருந்தால், கெடுதல் குறைவு. சந்திரனுக்கும் இது பொருந்தும்.
சந்திரனுக்கு 12,1,2 ஆம் பாவங்கள் மொத்த அஷ்டகவர்க்க கட்டத்தில் 30 பரல்களுக்கு மேல் பெற்று இருந்தால், கோட்சார சனி பெரிய பாதிப்புகளை தராது. ஜாதகரின் பிரச்சினைகளை நீக்காது. மாறாக, அவற்றை எதிர்கொள்ளும் திறனைத் தரும்.
இவை எல்லாம் இருந்தால் ஏழரைச் சனி உங்களைப் பார்த்துச் சொல்வார். "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா! இவன் ரொம்ப நல்லவன்டா!"
அதுவே, உங்கள் ஜாதகத்தில் சனி யோகியாகவோ, லக்கினாதிபதியாகவோ அல்லது லாப அதிபதியாகவோ இருந்து அதிக பாகைகளையும் பரல்களையும் (6+) வாங்கி இருந்தால் (ஆத்மகாரகனாக அமைந்தால் மற்றும் நல்ல இடத்தில் இருந்தால்), அவர் தசாபுக்தி நடந்தால், இந்தக் காலத்தில் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்துவிட்டுப் போவார். ஏழரையில் மேலே வந்தவர்கள் பலருக்கும் இந்த விதிவிலக்குகள் பொருந்தி இருக்கும். அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் மக்களே!
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment